மின்சார சிக்கனம்-எளிய வழிகள்


மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பது தெரியும். சில வேளை மின்சார வாரியம் வழங்கும் பில்கள் கூட ஷாக் அடிக்கும். மின்சாரத்தை நாம் அதிகமாக உபயோகிக்கும் போது ஒரு மீட்டரில் அது செலவுக்கணக்கில் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் இது போன்ற ஷாக் தவிர்க்கலாம். மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில எளிய வழிகளை கடைபிடித்தாலே போதும்.
முதலாவது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் மின்சாரவாரியம் கட்டணங்களை அளவிடும் முறை. மின்சாரம் அறவே உபயோகிக்காவிட்டாலும் குறைந்த பட்ச கட்டணம் செலுத்தியாக வேண்டும். பயனீட்டு அளவு அதிகரிக்கும் தோறும் ஒரு யூனிட்டுக்கான கட்டணம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகும். எவ்வளவு குறைவாக மின்சாரம் செலவளிக்கிறோமோ அதற்கேற்றபடி ஒரு யூனிட்டுக்கான கட்டணம் குறைவாக இருக்கும். அதற்காக வீட்டில் எல்லா விளக்குகளையும் அணைத்து போட்டுவிட்டு இருளில் இருப்பதால் எங்கேயாவது போய் முட்டிக்கொண்டு ஆஸ்பத்திரி பில் கட்ட வேண்டி வரும். பின் எப்படித்தான் மின்சாரத்தை எப்படி சிக்கனப்படுத்துவது?
  • சாதாரண குண்டு பல்புகள் எரியும் போது மின்சாரத்தின் பெரும்பகுதி வெப்ப சக்தியாக வீணாக வெளியிடப்படுகிறது. இது புவி வெப்பம்(Global warming) அடையவும் காரணமாகிறது. எனவே இதை ஒழித்துக்கட்டிவிட்டு குழல் விளக்குகள் (Flourescent Tube lights) அல்லது C.F.L (Compact Flourescent lights) விளக்குகள் பயன்படுத்தினால் மின்சாரம் பெருமளவு சிக்கனப் படுத்தலாம். குழல் விளக்குகள அதிக வெப்பம் அடைவதில்லை. ஆனால் அவற்றில் பயன் படுத்தப்படும் பாதரச வாயு நச்சுத்தன்மை வாய்ந்தது எனவே ஃபியூஸ் ஆன குழாய் விளக்குகளை உடைக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். ஒரு சி.எஃப்.எல். பல்பு, வழக்கமான பல்பைக் காட்டிலும் ஐந்து மடங்கு வெளிச்சத்தைத் தருகிறது. நீங்கள் 60 வாட்ஸ் சாதாரண பல்புக்கு பதிலாக 15 வாட்ஸ் சி.எஃப்.எல். பல்புகளை உபயோகித்தால், குறைந்தபட்சம் ஒரு மணிநேரத்திற்கு 45 வாட்ஸ் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்.மேலும் மஞ்சள் ஒளிக்கு பதில் வெள்ளை ஒளி தருகிறது.
  • சாதாரண குழாய் விளக்குகளிலும் Ballast எனப்படும் பழைய சோக்குகளில் தாமிரம் அல்லது அலுமினிய கம்பிகள் சுற்றப்பட்டு இருக்கும்.இதிலும் உண்டாகும் மின் தடை (Resistance) காரணம் கொஞ்சம் மின்சக்தி வெப்ப சக்தியாக வீணாகிறது. இந்த சோக்குகளை மாற்றி விட்டு எலெக்ட்ரானிக் சோக்குகள் பயன் படுத்தினால் மின்சாரம் சேமிக்கலாம்.அதோடு இதற்கு ஸ்டார்ட்டர் தேவையில்லை எனவே சுவிட்ச் இட்டதும் எரியும். குறைந்த மின் அழுத்தத்திலும் வேலை செய்யும். 50 Hz துடிப்புள்ள வீட்டு மின்சாரம் எலெக்ட்ரானிக் சோக்கில் அதிக அதிர்வெண்ணுடைய மின் துடிப்ப்பாக மாற்றப்படுவதால் குழல் விளக்கு ஒளியில் FLicker இருக்காது, Eficiency யும் 20%அதிகம்.
  • கொஞ்சம் வெளிச்சம் குறைவாக போதும் என்ற இடங்களில் Hi Power LED விளக்குகள் உபயோகிக்கலாம். 0.6 watts மின் சக்தி மட்டுமே எடுத்து கொள்ளும் இத்தகைய Power LED (Light Emitting Diodes) யின் ஒளி 25 Watts பல்புக்கு அல்லது11 Watts CFL விளக்கின் ஒளிக்கு சமம். மின்சாரம் இல்லாத இடங்களிலும் பாட்டரி மற்றும் சூரிய மின்கலன்கள் மூலம் இயக்கலாம். அந்த அளவு மிக குறைந்த மின் சக்தி தான் தேவை. இப்போது குழல் விளக்கிற்கு பதிலாகவும் , கார் முகப்பு விளக்கிலும் கூட LED க்கள் பயன் படுகின்றன. இதற்காகும் குறைந்த செலவை விரைவில் மின்சார சேமிப்பால் ஈட்டிவிடலாம். LED ஒளியில் வெப்பம் ஏற்படாது. இதன் Efficiency 90%. நீங்களே செய்ய LED Lamp Project
  • சமையல் அறையில் உணவருந்தும் இடங்களில் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும். தொலைக் காட்சிப் பெட்டி இருக்கும் அறையில் மெல்லிய வெளிச்சம் போதும். அதுவும் டிவிக்கு பின்புறமிருந்து வர வேண்டும். படுக்கை அறையிலும் மெல்லிய விளக்குகள் போதும்.வீட்டில் விளக்குகள் அமைக்கும் போது சரியான இடங்களில் சரியான வெளிச்சம் தரும் விளக்குகளை அதிக நிழல் விழாமல் சிறப்பாக அமைக்க வேண்டும். கண்ணை உறுத்தும் பிரகாச விளக்குகள் தேவை இல்லை.
  • வெப்பம் அதிகம் வெளியிடப்படும் அறை விளக்குகளால். குளிரூட்டிகள், குளிர் பதன பெட்டிகளின் மின் செலவு அதிகரிக்கிறது.
  • வீட்டில் எல்லா இடங்களிலும் ஏசி அவசியமற்றது. அதிலும் ஏசி இருக்கிற அறையின் சுவர்களும் கதவுகளும் உள்ளே இருக்கும் குளிர் காற்று வெளியேறாமல் இருக்கும்படி அமைக்கப்பட வேண்டும். திறந்தே உள்ள இடங்களில் ஏசி பயனற்றது. அதிக நபர் புழங்கும் மூடப்பட்ட அறைகளில் அடைபட்டு கிடக்கும் காற்றில் சுத்தமான பிராண வாயு இருப்பதில்லை.
  • இந்தியாவில் ஏசி தேவையற்ற ஒன்று வீட்டை சுற்றி நல்ல மரங்களும் சாதாரண மின் விசிறியும் இருந்தாலே போதும் . தண்ணீர் காற்றில் ஆவியாவதால் காற்றை குளிரச்செய்யும் Air Cooler கள் காற்றில் ஈரப்பதம் குறைந்த இடங்களிலேயே நன்றாக வேலை செய்யும். காற்றில் ஈரம் நிறைந்த நம் நாட்டுக்கு சரிப்படாது.
  • ஏசி குளிர் அளவை சரியான வெப்பநிலையில் வைக்கவும். நடுங்கும் அளவு குளிர வைத்து விட்டு மூன்று போர்வை போர்த்திவிட்டு இருக்கத் தேவையில்லை. நம் உடல் சரியாக இயங்கவே அதற்குரியவெப்பம் தேவை.வெளி வெப்பநிலை அதற்கு கீழே போனால் உடலே தன் சக்தியை வெப்பமாக செலவளித்து உடலை சரியான வெப்பநிலையில் வைக்க முயலும். இதை புரிந்து கொண்டு ஏசியானாலும் மின் விசிறியானாலும் தேவைப்படும் அளவில் வெப்ப கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்.
  • மின் விசிறிகளில் உள்ள பழைய மின்தடை ரெகுலேட்டர்களை மாற்றி விட்டு எலெக்ட்ரானிக் ரெகுலேட்டர்கள் உபயோகித்தால் மின்சாரம் சேமிக்கலாம். மின்தடை ரெகுலேட்டர்களில் மின் விசிறி வேகம் குறைவாக வைக்க மின் தடையை பயன் படுத்துகிறோம்.இந்த மின் தடை கொஞ்சம் மின்சாரத்தை வெப்பமாக மாற்றி வீணாக்குகிறது. எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்கள் மூலம் வீட்டு மின்சார அலையின் ஒரு பகுதியை மட்டும் பயன் படுத்தி மின் விசிறி வேகத்தை கட்டுப்படுத்துகிறது. எனவே குறைந்த வேகத்தில் சுழலும் விசிறி குறைவான சக்தியே பயன்படுத்தும்.
  • படுக்கை அறையில் லைட் மற்றும் ஃபேன் சுவிட்சுக்கள் படுக்கைக்கு அருகே இருப்பது நலம். நடு இரவில் குளிர் அதிகமானால் ஃபேன் வேகத்தை குறைக்கவோ நிறுத்தவோ எளிது.
  • சிறிய குடும்பமென்றால் ஒரே அறையில் தூங்குவதால் தனித்தனி விசிறி தேவைப்படாது. தினமும் இரவும் பகலும் ஓடும் மின் விசிறிகள் தான் மின்செலவை அதிகப்படுத்துவதில் முதலிடத்திலிருப்பது.
  • அதிக efficiency உடைய சில உயர்தர மின் விசிறிகள் சக்தி குறைவாக செலவளிக்கும்.
  • வீடுகள் அமைக்கும் போது நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் வரும்படி ஜன்னல்கள் அமைப்பதால் பகலில் மின்சாரம் பெருமளவு மிச்சப்படுத்தலாம்.
  • சில வீடுகளில் யாரும் பார்கிறார்களோ இல்லையோ காலை முதல் இரவு வரை டீவி ஓடிக்கொண்டிருக்கும். இதை தவிர்க்க வேண்டும். தொலைகாட்சி பார்க்கவேண்டுமென்றால் அதற்குரிய நேரம் ஒதுக்க வேண்டும். அளவாக வைத்துக்கொள்ள வேண்டும்.குடும்பத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்திருந்து கொஞ்ச நேரம் பார்க்கலாம். மற்றபடி எந்த வேலைகளையும் பாதிக்காமல் எஃப் எம் ரேடியோ கேட்கலாம்.
  • மின்சாரத்தை விரயம் செய்து ஊர்முழுக்க மின் விளக்குகளால் அலங்கரித்து காது கிழிய மைக்செட் வைத்து அலறும் பொது விழாக்களையும் வீட்டு விழாக்களையும் ஊக்குவிக்க கூடாது. விழாக்கள் எதுவானாலும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் மகிழ்சியை பகிர்ந்து கொள்வதாகவும், சுற்று சூழலக்கு கேடு செய்யாமலும் இருக்க வேண்டும்.
  • இசை கேட்க விரும்பினால் ஒலிபெருக்கியின் அளவை குறைத்து உங்களுக்கு மட்டும் கேட்கும்படி செய்வதும் மின் சேமிப்பு மட்டுமல்ல சுற்று சூழலுக்கும் நல்லது.
  • குளிர் பதன பெட்டிக்குள் ஒரு மாதத்திற்கு தேவையான காய்கறிகளை போட்டு அடைதது வைக்க தேவையில்லை. அவ்வப்போது Fresh ஆக வாங்கிப் பயன்படுத்தவும்.
  • உங்கள் குடும்பத்துக்கு தேவையான சைசில் உள்ள ஃபிரிட்ஜ் வாங்கவும் சிறிய குடும்பத்திற்கு பெரிய ஃபிரிட்ஜ் தேவையில்லை.
  • தேவையற்ற பொருட்களை ஃபிரிட்ஜுக்குள் திணித்து வைக்காதீர்கள்.
  • ஃபிரிட்ஜை மின்சாரம் சேமிக்கிறேன் என்று அடிக்கடி அணைத்து போடாதீர்கள். தேவையான அளவு குளிர்ந்ததும் ஃபிரிட்ஜ் தானாகவே ஆஃப் ஆகிவிடும்.தேவையின்றி அடிக்கடி ஃபிரிட்ஜை திறந்து மூடாதீர்கள். உள்ளே இருக்கும் குளிர் வேளியே வெளியேறினால் அதை ஈடுகட்ட ஃபிரிட்ஜ் அதிக நேரம் இயங்கும்.ஃபிரீசருக்குள் ஐஸ் கட்டிகள் நிறைந்திருந்தால் மட்டும் கொஞ்ச நேரம் அணைத்துப் போடவும்.
  • அவசரம் இல்லையெனில் வாஷிங் மெஷினில் ட்ரையர் பயன் படுத்துவதை தவிர்த்து துணிகளை கொடியில் உலர்த்தலாம்.
  • அதிகம் கசங்காத நல்ல ரக துணிகள் குறைவாக இஸ்திரி செய்தால் போதும். டீ ஷர்ட்,பனியன்கள் போன்றவை மூலம் இஸ்திரியில் மின் சேமிக்கலாம். அடிக்கடி இஸ்திரி போடுவதை தவிர்த்து மொத்தமாக ஒரே நேரம் இஸ்திரி போடுவது நல்லது.
  • மின்சார அடுப்பில் சாதாரண நிக்ரோம் கம்பியிலான ஹீட்டிங் எலிமென்ட் உள்ள அடுப்பு , மின்சார குக்கர் அதிக மின் விரயம் செய்யக்கூடியதும் ஆபத்தானதும் கூட. அதற்கு பதிலாக இன்டக்சன் அடுப்பு பயன் படுத்தலாம்.இதில் அடுப்பு சூடாவதில்லை .அதில் வைக்கப்பட்ட இரும்பு, ஸ்டீல் பாத்திரம் மட்டுமே சூடாவதால் இதன் Eficiency மற்றும் பாதுகாப்பும் அதிகம். இது மின்சாரத்தை செலவு செய்தாலும் சமையல் Gas ஐ சேமிக்கிறது. மைக்ரோ வேவ் அடுப்பு பாத்திரத்தை கூட சூடாக்காமல் உணவை நேரடியாக சூடாக்குவதால் அதன் efficiency யும் அதிகம் என்றாலும் இந்திய சமையலுக்கு அதன் பயன்பாடு சற்று குறைவே.
  • வாட்டர் ஹீட்டர் அதிக சக்தி விழுங்கக்கூடியது. தேவையின்றி பயன் படுத்த வேண்டாம்.
  • சூரிய சக்தியை பயன்படுத்தி, தண்ணீர் சூடாக்கலாம், தண்ணீர் சுத்தீகரிக்கலாம்,சமையல் செய்யலாம்,மின்சாரம் பெறலாம் ,விளக்குகள் எரிக்கலாம்.
  • தண்ணீரை சிக்கனமாக செலவளிப்பதன் மூலம் அடிக்கடி நிலத்தடி நீரை டாங்கிற்கு பம்ப் செய்ய வேண்டிவராது மின்சாரம் சிக்கனமாகும்.
  • காற்றின் உதவியால் இயங்கும் பம்ப் அமைத்து நிலத்தடி நீரை மேலே கொண்டு வரலாம்.
  • பழைய CRT (Cathode Ray Tube) டைப் டீவி,மானிட்டர் ஆகியவற்றுக்கு விடுதலை கொடுத்து புதிய LCD (Liquid Crystal Display)டைப் டிவி ,மானிடருக்கு மாறுங்கள். மின்சாரத்தை பெருமளவு சேமிக்கலாம். X-Ray போன்ற ஆபத்தான Radiation பிரச்சனைகளும் இல்லை.
  • விலை கொஞ்சம் அதிகமானாலும் இன்னும் புதிய LED(Light emitting DIode) வகை டிவி,மானிட்டர்கள் LCD மானிட்டர்களை விட பல மடங்கு குறைந்த மின்சக்தியில் இயங்க வல்லது.
  • ஒரு வீட்டில் ஒவ்வொரு அறைக்கும் டிவி தேவையில்லை.குறிப்பாக படுக்கை அறையில் தேவையில்லை.
  • அறையின் சைசுக்கு ஏற்ற டிவி வாங்கவும். பெரிய ஹாலுக்கு தான் பெரிய டிவி. சின்ன அறைக்கு சின்ன டிவி போதும். சைசுக்கு ஏற்ப மின் செலவு அதிகரிக்கும்.
  • கணியை தேவைப்படும் போது மட்டும் பயன் படுத்தவும்.
  • நீண்ட நேரம் கழித்து தான் மீண்டும் உபயோகப்படுத்துவோம் என்றால் டிவி,டிஷ் ரிசீவர்,கம்பியூட்டர்,டி.வீ.டி பிளேயர் போன்றவற்றை Stand-by யில் வைக்காமல் பவர் ஆஃப் செய்து விடவும்.
  • தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் நேரம் மட்டும் விளக்குகள், ஃபேன்கள் பயன் படுத்த வேண்டும்.
  • மின்சாரத்தில் இயங்கும் எந்த பொருளும் அது மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்தக் கூடியது தானா என பார்த்து வாங்க வேண்டும்.
  • எல்லா பொருட்களிலும் அதன் மின் செலவை Watts அளவில் குறிப்பிட்டிருப்பர்கள். அதை படித்து புரிந்து கொள்ள வேண்டும் ஒரு Watts என்பது ஒரு மணி நேரம் அது செலவளிக்கும் மின்சக்தியின் அளவு. எந்த கருவி எவ்வளவு சக்தி செலவளிக்கும் என இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள்

குறை ஒன்றும் இல்லை !!! இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பகர்வுங்க.. நன்றி..
malar இவ்வாறு கூறியுள்ளார்…
NRI களுக்கு தமிழகத்தில் மருத்துவம் படிக்க மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்குமா ? தெரிந்தால் சொலுங்க plz
அன்புடன் மலிக்கா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றி..

http://niroodai.blogspot.com/
Geetha6 இவ்வாறு கூறியுள்ளார்…
very useful!!