இடம் -வெளியுலகம்:

பூமி
இடம் (Space) என்பது உண்மையில் என்ன? எப்படி உருவாகிறது? இதற்கு எல்லை உண்டா? என்ற கேள்விகள் நம் சிந்தனையில் எப்போதும் நீங்கா இடம் பெற்றவை.

நம் மனம் உடலுக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து உணர்ந்த வினாடியே அதை ஒரு இடத்தில் காண்கிறோம். நம்மை சுற்றிலும் பொருட்கள் இடத்தில் இருப்பதை பார்க்கிறோம் அந்த இடம் வீடு அலுவலகம், வீதி நகரம் நாடு பூமி என விரிந்து கொண்டே செல்கிறது.
சூரிய மண்டலம்
  • பூமியின் மொத்தம் பரப்பளவு  51 கோடியே 66 ஆயிரம் கிலோ மீட்டர்.
  • சூரிய மண்டலத்தின் மூன்றாவது கிரகமான பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் 152 மில்லியன் கிலோ மீட்டர்.
  • பூமிக்கும் சூரிய மண்டலத்தின் வெளி எல்லைக்கும் இடையே 3.5 பில்லியன்  மைல்கள் தூரமிருக்கிறது.
  • சூரியனின் விட்டம் 700000 கி.மீ.
  • சூரியனும் அதன் எல்லா கோள்களும் ஒரு மண்டலமாக அமைந்து இன்னும் பெரிய இடத்தில் மில்கி வே என்னும்கேலக்ஸியில் ஒரு புள்ளியாக இடம் பெறுகிறது.
    மில்கி வே கேலக்ஸி
  • சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரம் ஆல்ஃபா சென்டாரி 25 ட்ரில்லியன் மைல் தூரத்தில் உள்ளது.
  • மில்கி வே எனும் காலக்ஸியில் சூரியனைப்போல் சுமார் 300 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றனவாம்,
  • சுழன்று கொண்டிருக்கும் மில்கி வேயின் குறுக்களவு 100,000 ஒளி வருடங்கள். (வினாடிக்கு சுமார் 1,86,282 மைல்கள் வேகத்தில் பாயும் ஒளி ஒரு வருடம் பயணம் செய்தால் அடையும் தூரம் ஒரு ஒளி வருடம்.)
  • இது போல சுமார் 15 மிலியன் கேலக்ஸிகள் இருக்கலாமாம்.
  • ஒரு காலக்சிக்கும் அடுத்த காலக்சிக்கும் இடையே பல மில்லியன் ஒளியான்டுகள் இடைவெளி இருக்கும்.
 வெறும் கண்ணால் பார்க்கும் போது நட்சத்திரங்கள் வானத்தில் வாரி இறைக்கப்படிருப்பது போல உதிரியாக காணப்பட்டாலும் அவை காலக்ஸிகளில் கொத்து கொத்தாகவே இருக்கிறது. காலக்ஸிகளும் அது போல கூட்டம் கூட்டமாகவே இருக்கிறது.

இடம் என்பது எவ்வளவு பிரம்மாண்டமென்று பேப்பரும் பேனாவும் எடுத்து இதெல்லாம் கணக்குப் போட்டு பாருங்கள்....ஸ்ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே..

இனி மண்டை காய வைக்கும் உண்மைகளும் இருக்கின்றன.

பிரபஞ்ச தோற்றம்
    இந்த மொத்த காலக்ஸிகளும் அங்கங்கே இஷ்டத்துக்கு இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் பிரபஞ்சப் பெருஞ்சுவர் என்னும் கோட்டைத் தாண்டாமல் அதன் ஒரு பக்கத்திலேயே இருக்கின்றன,அதாவது மீன் தொட்டியில் நடுவில் ஒரு கண்ணாடி தடுப்பு வைத்து மீன்கள் எல்லாம் அதன் ஒரு பக்கத்திலேயே தடுத்து வைத்திருப்பது போல.  பிரபஞ்சப் பெருஞ்சுவருக்கு அந்தப்பக்கம் என்ன இருக்கிறதென்றே தெரியாது.
முப்பரிமாண அளவில் சொல்வதென்றால்  இந்த பிரபஞ்சப் பெருஞ்சுவரின் நீளம் கண்ணுக்கெட்டும் தூரம் வரை முடிவிலாது போய்க் கொண்டே இருக்கிறது இது வரை பார்த்த அளவில் 500 மில்லியன் ஒளியாண்டு அகலம் 200 மிலியன் ஒளியாண்டு. தடிமன் 15 மில்லியன் ஒளியாண்டு.

    நாம் எப்படி பூமி கோளத்தின் மேல் பரப்பில் நடமாடுகிறோமோ அது போல பிரபஞ்சத்தை ஒரு ஊதபட்டுக்கொண்டிருக்கின்ற பலூனுக்கு ஒப்பிட்டால்அதன் வெளிப்புறத்தில் உள்ள எண்ணற்ற வெள்ளை வண்ண புள்ளிகளின் போல  காலக்ஸிகள் எல்லாமே பிரபஞ்சத்தின் தோல் போன்ற பரப்பில் இருக்கின்றன. பலூனை ஊத ஊத புள்ளிகளுக்கிடயே இடைவெளி அதிகரிப்பது போல பிரம்மாண்டமான பிரபஞ்சப் பரப்பில் கேலக்சிகள் எல்லாம் ஒன்றைவிட்டு ஒன்று வேகமாக விலகி ஓடிக்கொண்டிருக்கிறது.

விண்வெளியில் நேராக பிரயாணித்துக் கொண்டே இருந்தால் முடிவில் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேருவோம். சர்குலர் பஸ் பிரயாணம் போல.நம் பயணத்தில் வழியில் பார்த்த நட்சத்திரங்களை மீண்டும் மீண்டும் வேறு இடங்களில் பார்ப்போம்.

விண் வெளியில் நெடுந்தொலைவின் காட்சிகள் என்பது காலத்தில் புதையுண்டு கிடக்கிறது. அதாவது நாம் காணும் பல காட்சிகளும் கடந்த காலத்தின் காட்சிகள். தொலைவில் தெரியும் அந்த நட்சத்திரங்கள் இப்போது அப்படி இருக்காது மட்டுமல்ல அங்கும் இருக்காது.

 நட்சத்திரங்கள் காலக்ஸிக்களுக்கு இடையே உள்ள வெளியும் வெறும் வெற்று வெளியல்ல.அது சக்திகளாலும் நுண் பொருட்களாலும் நிரம்பியிருக்கிறது.நட்சத்திரங்களின் ஈர்ப்பு சக்தியை பொறுத்து தான் அதை சுற்றியுள்ள வெளியின் இடம் அமைகிறது.

நம் பார்வைக்கு விண்வெளி ஒரு பூப்போட்ட சேலையை நேராக விரித்து பிடித்தது போல் தோன்றினாலும் உண்மையில் அது நன்றாக கசங்கிய சேலையே அதாவது வெளியில் இடம் என்பது தாறு மாறாக வளைந்தும் நெளிந்தும் சுருங்கியும் விரிந்தும்  இருக்கிறது. இதன் காரணமாக உண்டாகும் லென்ஸ் எஃபெக்டால் நட்சத்திர ஓளியும் தாறு மாறாக நம்மை அடைகிறது அதாவது ஒன்று பலவாகவும் பெரிது சிறிதாகவும் சிரிது பெரிதாகவும் தெரியும்.

கருந்துளை 
உப கிரகங்கள் ,கிரகங்கள் நட்சத்திரங்கள் காலக்சிகள் எல்லாம் ஒன்றை ஒன்று  சுற்றி வருவதோடு தானும் சுழல்கின்றன. என்றாலும் இவை தன்னிஷ்டப்படி சுழல்வதில்லை அதன் பாதையே அப்படி வளைவாகத் தான் இருக்கிறது .அந்த பாதையை நிர்ணயிப்பது அவற்றின் ஈர்ப்பு விசைகள். அதிக பொருண்மையான நட்சத்திரங்கள் அதிக ஈர்ப்பு உடையதாக இருக்கும் அதை சுற்றியுள்ள இடத்தையும் ஓளியையும் கூட  ஈர்த்துக்கொள்ளும்.
 சுற்றியுள்ள நட்சத்திரங்களை இடங்களை அப்படியே சுருட்டி ஈர்த்து ஏப்பம் விடும் கருந்துளைகள்  வேறு இருக்கிறது. இது ஒளியை கூட தப்பவிடாமல் ஈர்த்துக்கொள்ளும்,

நிலவுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் நிலவின் விட்டம் போல் 108 மடங்கு.
பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் பூமியின் விட்டம் போல் 108 மடங்கு
பல கிரகங்கள் நட்சத்திரங்கள் கேலக்ஸிகள் எல்லாம் இந்த விதியில் இருப்பதாக கார்ல் சாகன் எனும் அறிஞர் கூறுகிறார்.ஆச்சரியம் தான்.

மொத்த பிரபஞ்சத்தில் வெறும் 4 % மட்டுமே அணுக்கள் அவற்றைத்தான் நாம் நட்சத்திரங்களாக கேலக்ஸிகளாக காண்பது மீதம் 74% என்னவென்று அறியாத Dark Energy யும் 22% Dark Matters ம் தான் இருக்கிறது,

நாமே ஒரு நட்சத்திர மண்டலத்தில் இருந்து கொண்டு பிரபஞ்சத்தை காண்பதும் அறிவதும் எப்படியென்றால் ஒரு மாநாடு கூட்டத்தை மேடையில் இருப்பவர்  பார்ப்பது போன்றதல்ல கூட்டத்தின் நெரிசலில் முண்டியடித்துக் கொண்டிருக்கும் ஒருவர் கூட்டத்தை பார்ப்பது போலானதாகும். நமது காலக்சியான மில்கி வே  பிரபஞ்சத்தின் பெரும்பகுதியை நம் பார்வையிலிருந்து மறைத்துக்கொண்டிருக்கிறது. 

பிரபஞ்சத்தில் எல்லாமே இயக்கத்தில் இருக்கிறது. வேறு வேறு தளங்களில் வேறு வேறு வேகங்களில் சுழன்று கொண்டிருக்கிறது. பார்க்கும் நாமும் அவ்வாறான ஒரு சுழற்சியில் இருப்பதால் நாம் நமக்கு அருகே நம் வேகத்திற்கு இணையான இயக்கத்தை ஓரளவு நிலையாக அடையாளப்படுத்தலாமே தவிர மில்லியன் பில்லையன் ஒளிவருஷம் போன்ற தூரங்கள் காலங்களில் இயங்கும் பிரபஞ்ச இயக்கம் ஒரு மாயாஜால நிகழ்சிதான். காண்பது கருதுவது எல்லாமே காட்சிப்பிழைதான், உண்மையில் என்னதான் இருக்கிறது?

அடிப்படையில் ஏதோ ஒன்றின் இடையறாத சுழற்சி,அதன் அலைகள் பிரதிபலிப்புகள் இவைகளைதான் எலக்ட்ரானாக ,புரோட்டானாக அணுவாக தனிமங்களாக ,மூலக்கூறுகளாக பொருட்களாக ,உலகமாக,நட்சத்திரமாக , இடமாக காலமாக பொருளாக சக்தியாக உயிர்களாக இன்னும் எல்லாவிதமாகவும் கருதிக்கொண்டிருக்கிறோம்.

விஞ்ஞானம் தெரியாத பாமரனைப் பொறுத்தவரை தன் அனுபவத்துக்கு எட்டிய அளவிலான தட்டையான, இயக்கமற்ற நிலப்பரப்பும், மேலே ஈபில் டவர் உயரத்துக்கு இழுத்துக்கட்டப்பட்ட வான முகடும் அதில் சில விளக்குகளும் தான் உண்மையான உலகம். முற்றத்தில் கயிற்றுக்கட்டிலில் மல்லாந்து படுத்து நட்சத்திரங்கள் சைட் அடிப்பதை பார்த்து சுகமாக தூங்கிவிடுவான் காலையில் நிச்சயம் சூரியன் வந்து எழுப்பும் என்ற நம்பிக்கையில்.  காலக்ஸி சுழல்கிறது என்றும்  தான் விண்வெளியில்  வினாடிக்கு 589 கி.மீ  வேகத்தில்(ஒரு ஜெட் விமானத்தை விட 2000 மடங்கு வேகத்தில்) பயணித்துக்கொண்டிருப்பதை அறியாமல்.  அவனுக்கு விஞ்ஞானிகள் அளவுக்கும் குழப்பமும் திகைப்பும் இல்லை.
                                                                                                                (தொடரும்)

கருத்துகள்

Rajakamal இவ்வாறு கூறியுள்ளார்…
superb - very good explanation - thanks brother