யார் நான்?



நான் யார் ?  இந்த கேள்விக்கு சுலபமான பதில் ஏதும் இல்லை. நான் யார் என்று விளக்கும் எந்த பதிலிலும் உண்மையில் நான் இல்லை.அது விளக்க முடியாத அனுபவம்
என்னை நான் மூன்று அடையாளங்களில் காண்கிறேன், 
1)   நான் யார் என்று என்னை உணர முயலும் என் தன்னுணர்வு.
2) என்னைபற்றி நான் உணர்ந்தவற்றைக்கொண்டு உருவாக்கிய மனம்.
3)என்னைப்பற்றி பிறரது  கருத்தில் உள்ள  பிம்பம்
சுருக்கமாக சொன்னால் நான் என்பது மூன்றாகப் பிரிந்திருக்கிறேன். உணரும் நான் ,உணரப்பட்ட ‘நான் , உருவாக்கப்டட நான்
இதில் எது உண்மையான நான்?
மூன்றாவது “நான்” என்பது என் செயல்களை கொண்டு பிறர் மனதில் உருவாகும் என்னைப் பற்றிய கருத்து, அண்ணனாக ,தம்பியாக அப்பாவாக நண்பனாக எதிரியாக என பல விதங்களில் நான் அறியப்படலாம்.இது நான் இறந்த பின்னும் இருக்கும்.மேலும் இதை உருவாக்க என் உடலும் மூளையும் தேவையாயிருக்கிறது.நான் ஒரு செயலற்ற ,பயனற்ற ஒன்றாய் இருந்தால் இந்த மூன்றாவது நான் இருக்க முடியாது. அதே நேரம் என் செயல்களால் பிறருக்கு உண்டாகும் நன்மையையோ தீமையையோ பொறுத்து என்னப்பற்றிய ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. எனவே இதுவல்ல உண்மையான நான்.
இனி இரண்டாவது “நான்” இந்த உடலும் மூளையும் நான் உருவாக்கி உணர்வது. இந்த மனித உடலுக்கு ஒரு தோற்றமும் ஒரு ஆயுளும் இருக்கு ஒரு முடிவும் இருக்கு என்று உணர்கிறோம். மனித உடலில் என்னை எப்போது உணர்ந்தேன்?. புலன்களும் உடலும் உருப்பெற தொடங்கியதிலிருந்து புலன்களால் நம்மை உணர்ந்து அது பற்றிய அறிவை நாம் வளர வளர வளர்த்துக் கொண்டோம். இந்த நான் என்பது பிறப்பிலிருந்து பிறந்து வளர்ந்து ஒரு நாள்  மடிகிறது. இது நம் மூளையில் நரம்புகளாக சேமிக்கப்படும் அறிவு. மூளை அழியும் போது இந்த நான் அழிந்து விடும். 
   இந்த நான் தான் உண்மையான நானா என்றால் இல்லை.என் பிறப்புக்கும் முன்னே நான் இருக்கிறேன், அதன் காரணமாகத்தான் தான் பிறப்பே நடக்கிறது. .ஆனால் அந்த என்னைப்பற்றிய தகவல்கள் என் மூளையில் இல்லை ஏனெனில் எனது மூளை நான் உருவாக்கிக் கொண்டது.அந்த என்னை பற்றிய தடயங்கள் என் செல்களுக்கு தெரியும் என் ஜீன்களின் நினைவில் இருக்கலாம்.அதற்கும் முன் மூலக்கூறுகளில் அணுக்களில் என் பூர்வீகம் இருக்கிறது.
என் உடல் நான் உருவாக்கி உணர்வது என்பதன் பொருள் என்ன? உண்மையில் நான் உணரும் என் உடல் நான் இல்லையா?
முதலில் நம் உடல் என்பது என்ன? எலும்பும்,தோலும் சதையும் ரத்தமும் கொண்ட ஒரு இயந்திரமா? நம் உடல் என்பது பல்வேறு உறுப்புகளால் ஆனதாக உணர்கிறோம். அவை யாவும் கோடிக்கணக்கான செல்களால் ஆனது என அறிகிறோம், ஒவ்வொரு செல்லுமே ஒரு தனித்த உயிரினம் தான்.நமக்குள்ள எல்லா தன்மையும் ஒவ்வொரு செல்களுக்குள்ளும் இருக்கிறது. செல்கள் பிறக்கிறது ,இறக்கிறது, சாப்பிடுகிறது, கழிவு வெளியேற்றுகிறது உணர்கிறது. இந்த கோடிக்கணக்கான செல்கள் ஒன்றுடன் ஒன்று தகவல் பரிமாறி தொடர்பு கொள்கிறது.அனைத்து செல்களின் ஒட்டு மொத்த உணர்வு தான் நாம் என்ற உணர்வாக நம்மை பார்க்கிறது. இப்படி நம்மை பார்க்கும் நான் தான் முதலாவது நான்.
சரி இப்போது இரண்டு நான் இருக்கிறேன்,இதில் பார்க்கும் நான் யாராகவெல்லாம் இருக்கிறேன், பார்க்கப்படும் என்னை எப்படியெல்லாம் உணர்கிறேன் என்று பார்ப்போம்.
இந்த பார்க்கும் நான் என்பது நான் குழந்தையாய் இருந்த  போதும் இப்படித்தான் பார்த்து அனுபவித்தது உடல் வளர்ந்த போதும் அதன் தன்மையில் எந்த மாற்றமுமில்லாமல் அப்படியே தான் இருக்கிறது. அது என் நினைவு தோன்று முன்னே இருக்கிறது, இதற்கு பிணி மூப்பு சாக்காடு எதுவுமில்லை .இது உணரும் உடல் தான் மாற்றமடைகிறது.இந்த உடலை எப்படியெல்லாம் உணருகிறோம் அது உண்மையில் என்னவாக இருக்க்றது என பார்ப்போம். உடலை பல பாகங்கள் கொண்ட எந்திரமாக ஒரு புறம் உணர்கிறோம், அதற்கு குறிப்பிட்ட வடிவம் ,வண்ணம்,அது இருக்க இடம் எல்லாம் உணர்கிறோம் ஆனால் ஒரே உடலாக காண்கிறோம்,
இனி உடல் என்பது செல்களால் ஆனது அனைத்து செல்களும் அடிப்படையில் ஒன்று போல கட்டமைப்புடையது என்று அறிகையில் நம் கருத்தில் இருக்கும் ஒரே உடம்பு  என்பது கலைந்து பல கோடி செல்களின் கூட்டு ஸ்தாபனம் என்று ஆகி விடுகிறது.நாம் என்ற ஒன்றை உணர்வு ஒரு மாயை, இந்த உணர்வின் சூத்திரக்கயிறு ஒவ்வொரு செல்லின் உணர்விலும் இருக்கிறது. என உணரும் போது நான் என்ற ஒற்றை பிம்பம் கலைந்துவிடுகிறது. 
  இன்னும் ஆழமாக என்னை தேடுகிறேன் .செல்களின் உணர்விலா நான் இருக்கிறேன்? அதுவும் இல்லை அதன் நியூக்கிளியஸில்குரோம சோம்களில், அதன் டி என் ஏக்களில் அதன் மூலக்கூறுகளில், அணுக்களில் என என் உணர்வின் மூலம் பிரிந்து கொண்டே போகிறது.
சரி நம் உடல் முழுக்க அணுக்களால் ஆனது தான், அணுக்களை தவிர நான் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை.
      இந்த அணு நிலையில் நான் எப்படி இருக்கிறேன், ஒவ்வொரு அணுவும் 99% வெற்றிடமாகத்தான் இருக்கிறது ஒரு சதவீதம் தான் எலகட்ரானும் புரோட்டானும் இருக்கிறது, என்றால் நான் உணரும் 99% ல் நான் இல்லை, அந்த ஒரு சதவீதம் எலக்ட்ரானும் புரோட்டானுமாகவாவது இருக்கிறேனா என்று பார்த்தால் அதுவும் இரு நிலைகளில் இருக்கிறது அதாவது நாம் கவனிக்கும் போது துகளாகவும் அல்லாத போது அலையாகவும் இருக்கிறது.
 மேலும் இந்த நிலையில் நானும் சரி நீங்களும் சரி இந்த உலகம் ,அதன் அத்தனை பொருட்களும் பிரபஞ்சமும் அனைத்தும் ஒரே தன்மையில் ஒன்றாக இருக்கிறது, இப்போது நான் பூமியாய் இருக்கிறேன், நீங்களாயிருக்கிறேன், மரமாய் ,விலங்காய் சூரியனாய் ,காலக்சியாய் ஏன் சக்தியாய் எல்லா இடமும் இருக்கிறேன்.இதை இங்கே எழுதும் நான் ,வாசிக்கும் நீங்களாகவும் இருக்கிறேன். பவுதீக உடல் உட்கார்ந்திருந்தாலும் சக்தி அலைகளாக எல்லா இடமும் பரவியே இருக்கிறேன். பவுதிக உடலுக்கு நிகழும் மரணம் இன்னிலையில் இல்லை.அந்த பவுதீக உடல் நாம் கவனிப்பதால் உருவாவது ,அது மாயை. நாம் கவனிப்பதை ‘நிறுத்தினால்‘.‘நாம் நம்மை பவுதீக தன்மையான இடம் பொருள் காலம் என்ற அனைத்தும் கடந்த ஒன்றாகி விடுவோம்.
எனவே பார்க்கப்படும் நாம் என்பது உண்மையானது அல்ல,பார்க்கும் நான் மட்டுமே உண்மையான நான் ,மற்றபடி நான் என்னைப் பற்றி உருவாக்கும் அனைத்து கருத்தும் வெறும் கருத்துக்களே. காணும் உணரும் அனைத்து கோலங்களும் பார்க்கும் நம் அறிவில் உருவாக்கிக்கொண்ட கருத்துக்களே அது தான் மாயை.
இனி பார்க்கும் நான் மட்டுமே உண்மையான நான் என்று கூறினாலும் அதிலும் ஒரு நுட்பமான பிழை இருக்கிறது. அதாவது பார்க்கும் என்னை பற்றி நான் உணர்வதிலும் மாயை இருக்கிறது, நான் இடம் பொருள் காலம் அற்ற நிலையிலேயே இருக்கிறேன் நீ நான் என்ற வேறுபாடு அற்ற நிலையில் உண்மையில் இருக்கி்றேன். ஆனால் உணர்வதோ என்னை தனியாக பிரித்தே உணர்கிறேன்.நம் தன்னுணர்வில் இந்த மாயையை ஒழிப்பதை தான் “நான் “என்ற உணர்வு அற்று போனால் முக்தி என்று சொல்வது.மாயைகள் அனைத்தும் கலைந்து போனால் இருப்பது ஏகமாய் இறையாய் இருக்கும்.

கருத்துகள்

Rajakamal இவ்வாறு கூறியுள்ளார்…
true, nothing but nonthing